Thursday, March 18, 2010

ஆன்மீகம் அவர்களுக்கல்ல - உங்களுக்குத்தான்

வியாழக்கிழமை.  காலை ஒரு மணி நேரத்தை வாரந்திரப் பத்திரிகைகளில் வீணடிக்கும் நாள்.  இன்று கொஞ்சம் குறிக்கோளோடு பத்திரிகைகளைப் பார்த்தேன்.  நித்யானந்தா விவகாரம் அடங்கியதால், அதைப்பற்றி எதாவது வித்தியாசமான கண்ணோட்டத்தைத் தேடினேன். ஜக்கி பற்றிய இரண்டு கட்டுரைகளில் எதுவும் சிறப்பாக இல்லை. அதனால் நான் சென்ற வாரம் எழுதியதை கொஞ்சம் விலாவாரியாக தமிழில் எழுதலாம் என்று எழுதுகிறேன்.

நித்தியானந்தா போன்ற விஷயங்கள் தினம் நடந்து கொண்டிருக்கிறது.  சம்பந்தப்பட்டவர்கள் உங்களுக்கு அயலார்களே. நீங்கள் மதிக்கும் ஒருவர் இப்படி நடந்துகொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அது உங்கள் குருவாகவோ, கடவுளாகவோ,தலைவனாகவோ, நெருங்கிய உறவாகவோ அல்லது நீங்களாகவோ இருக்கலாம். உங்களை கலங்க அடிக்க, ஒரு நிகழ்ச்சி தேவையில்லை. செய்தி போதும். அது அதன் வேலையை செய்ய ஆரம்பிக்கும்.

நீங்கள் கோழையாக இருந்தால் செய்தியை மறுக்க ஆரம்பிப்பீர்கள்.  அப்படி ஒன்று நடக்கவில்லை, இது திட்டமிட்ட சதி போன்றவை இந்த ரகம்.  சமீபத்திய மறுப்பு, கம்ப்யுட்டர் கிராபிக்ஸ் சதி.

நீங்கள் அடாவடி பார்ட்டியாக இருந்தால், மறுக்க மாட்டீர்கள்.  நியாயப்படுத்துவீர்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை யாரும் நியாயப்படுத்தவில்லை. இந்தியாவில் யாரும் அப்படி செய்ய முயற்சிப்பதும் இல்லை.

நீங்கள் பிராக்டிகல் மனிதன் என்றால், இதை மறக்கவோ, அல்லது வேறு ஒருவர் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பீர்கள்.

இவை எல்லாம் உங்கள் செயல்கள். இந்த நிலையில்,மிகச்சிலரின் செயல்கள் ஆக்கப்பூர்வமாக இருந்திருக்கின்றன. சுவாமி தயானந்தசரஸ்வதி, சக்தி இல்லாத உருவ வழிபாட்டை எதிர்க்க ஆர்யா சமாஜத்தை ஆரம்பிக்க வைத்தது.

சில அழிவு நிலைக்கும் சென்றன. ஏமாற்றத்தை சந்திக்க முடியாமல், திருச்சியில் ஒரு குடும்பம், மொத்தமாக தற்கொலை செய்து கொண்டது.

இவை எல்லாம் செயல்கள் - உணர்வுகள் இல்லை. உங்கள் உண்மையான உணர்வு என்ன? வெட்கம், ஏமாற்றப்பட்ட உணர்வு, அருவருப்பு மற்றும் பல.


இந்த உணர்வோடு ஒரு நிமிடம் இருந்தது பாருங்கள். இந்த உணர்வு உடம்பில் தோன்றும் வலி அல்லது எரிச்சல் போன்றது. உடம்பில் வலி வருவதை நாம் இயல்பாக எடுத்துக்கொள்கிறோம். தாங்க முடியாத போது, வலி நிவாரணத்தைத் தேடுகிறோம்.

மனதில் இந்த உணர்வுகள் சிறு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.  அவ்வளவு தான். இந்தஅசௌகரியத்தை ஒரு நிமிடம் அனுபவித்து விட்டால், அது அதன் பின் தொல்லை தருவது இல்லை. அதன்பின், இப்படிப்பட்ட செய்திகள் உங்களைப்பாதிப்பதில்லை. சற்றே வித்தியாசமாக மற்றொரு செய்தி பாதிக்கலாம். இவற்றை எல்லாம் எப்படி கையாள்வது என்று தெரிந்து விட்டால், எந்த செய்தியும் உங்களை அசைக்க முடியாது.

நம்பிக்கை என்பது ஆன்மீகத்திற்கு மட்டும் சொந்தமானதில்லை. கம்யூனிச நம்பிக்கையாளர்கள் சோவித் வீழ்ந்த போது கலங்கினார்கள். தூய்மையான அரசியல் மீது நம்பிக்கை வைத்தவர்கள், நிக்சன் மற்றும் கிளிண்டன் காலத்தில் கலங்கினார்கள். ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் எமெர்ஜென்சியின்போது கலங்கி இருப்பார்கள்.

நம்பிக்கை வைக்காமல் உங்களால் இருக்க முடியாது. ஒரு மனிதரின் மேலோ, கடவுள், தலைவன், சின்னம், நிறுவனத்தின் மேலோ நம்பிக்கை வைப்பது, உங்களைப்போல் இயற்கையானது. ஒன்றைவிட்டு மற்றொன்றின்  மேல் நம்பிக்கை வைக்கலாம். ஆனால் அதற்கும் சோதனை வராது என்பது நிச்சயமில்லை. இந்தக்காலத்தில், சோதனை வரும் என்பது தான் நிச்சயம்.  அதை சமாளிக்கத் தெரிந்துவிட்டால், நிம்மதியாக வாழலாம்.

1 comment:

(Mis)Chief Editor said...

Annaa!

Nachnu Irukku!
Kalakittel!!

-MCE

Earlier Posts