Sunday, March 22, 2026

துரந்தர் - நிறைவை நோக்கி...

விமலாதித்த மாமல்லன் 'எழுத்துக்கலை' என்ற புத்தகத்தில், கதை சொல்பவர்களின் அசிரத்தையை சுட்டிக்காட்ட எஸ்ராவின் ஒரு கதையை உதாரணமாகக் காட்டுகிறார். அதில் எஸ்ரா ஆவடி, தரமணி, நுங்கம்பாக்கம் என்று குழப்பி இருப்பார்.  ஒரு கதையில் நிகழ்வுகளில் மேலதிக விவரங்களைத் தருவது, வாசகர்களை கதையில் ஈடுபடுத்தும். அந்த விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.  மேம்போக்கான அல்லத தவறான விவரங்கள், படிப்பவர்களின் அனுபவத்தை பாதிக்கும்.   தாளித்துக் கொட்டுவது சுவை சேர்க்கும் என்பதற்காக, பாயசத்திற்கு கடுகு தாளித்துக் கொட்டுவதற்கு ஒப்பானது.  எழுதுபவர் எந்த அனுபவத்தை வாசகர்களுக்குத் தர விரும்புகிறாரோ, தவறான தகவல்களால், அந்த அனுபவம் சிதைகிறது.   

விவரப்பிழைகள் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, சினிமாவுக்கும் பொருத்தும்.  சினிமாவை ரசிக்க, காட்சிப்படுத்திக் கொள்ளும் கற்பனை திறன் குறைவாக இருந்தாலும், விவரப் பிழைகள், தீவிர சினிமா ரசிகனுக்கு எரிச்சல் ஊட்டுபவை.

தமிழ் சினிமா உட்பட, இந்திய சினிமா, கதை நடக்கும் இடத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  ஒரு கதை சென்னையில் நடக்கிறது என்றால், சென்ட்ரல் அல்லது எழும்பூர் ரயில் நிலையத்தைக் காட்டினால் போதும் - பெங்களூர் என்றால் விதான் சௌதா, தில்லிக்கு ராஷ்டிரபதி பவன், மும்பைக்கு மரைன் டிரைவ் அல்லது சிஎஸ்டி.  அதற்குப் பின், கதாபாத்திரங்களின் பயணங்களைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது.  ஊரைக் கூட குறிப்பிடாமல், 'நம்ம ஊர்ல' என்று தொடங்கும் வசனங்கள்தான் இருக்கும்.

எனக்குத் தெரிந்து, முதன்முறை, கதைக்களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம் நாயகன்.  தாராவி, பல மொழிகள் பேசும் அதன் மனிதர்கள் போன்றவற்றில் கொஞ்சம் அக்கறை இருந்தது.  ஹோலியின் போது மழை பெய்வதை கலைஞனின் சுதந்திரம் என்று ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்.  சங்கர் படங்களில் சென்னைக்கு முக்கியத்துவம் இருந்தது.  இருந்தாலும், அன்னியனில், நாயகன் திருவல்லிக்கேணியில் இருப்பதாகக் காட்டப்படும்.  அங்கிருந்து எந்தக் கோர்ட்டுக்குச் செல்லும் வழியில் சுரங்கமும் மேம்பாலமும் இருக்கிறது, நாயகனின் மொபெட் பிரேக் அறுந்த பின் புதுப்பேட்டைக்குப் போய்விட்டு, எந்த பஸ்ஸில் செல்கிறார் என்று கேள்வி எழத் தொடங்கி அதற்கு சரியான பதில் இல்லையென்றால் படத்திற்கு மதிப்பில்லை.

ஹாலிவுட் படங்கள், நியூயார்க் அல்லது லாஸ் ஏஞ்சலிஸ் நகரங்களில் நிகழ்வதாகக் காட்டப்படும் போது, பெரும்பாலும் இட விவரங்களைப் பற்றிய கேள்வி எழாது.  அனால், கதைக்களம் அட்லாண்டிக்கிற்கு கிழக்கே என்றால், விவரங்கள் பல தவறாகவே இருக்கும்.  சையத் திரிவேதி என்று உபரி கதாபாத்திரத்தின் பெயர் இருக்கும்.  டாம் க்ரூஸில் மிஷன் இம்பாஸிபிள் மும்பையில் நடப்பதாக உள்ள காட்சிகளில் கன்னட அறிவிப்புகள் காணப்படும்.

அந்த விதத்தில் துரந்தர் ஒரு முக்கியமான படம்.  படத்தின் களம் பாகிஸ்தானில், கராச்சியின் பகுதியான லியாரி.  படத்தயாரிப்பில் சம்பந்தப்பட்ட்ட ஆயிரக்கணக்கானவர்களில் மிகச்சிலரே அந்தப் பகுதியைப் பற்றி தெரிந்தவர்களாக இருந்திருக்க முடியும்.  இருப்பினும், கதை நடக்கும் இடங்கள் எதுவும் எசகு பிசகாக இல்லை. முரித்கெயிலில் நாயகனை யார் காப்பாற்றுவார் போன்ற கேள்விகள் மட்டுமின்றி, ரசிகனின் ஒவ்வொரு கேள்விக்கும் படத்தில் சரியான விடை இருக்கிறது.  சில கேள்விகளுக்கான பதில்கள், படத்தின் நீளத்தைக் கருதி, இறுதியில் பெயர்கள் ஓடும் போது காட்டப்படுகின்றன. ஒவ்வொரு தகவலும் சரியாக, பொருந்தி வருகின்றது.  ஒரு காட்சி, மாதவன் ஹோமம் நடக்கும் இடத்திலிருந்து எழுந்து தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதாக உள்ளது.  அது என்ன ஹோமம் என்பதற்கான பதிலையும் ஒரு ரசிகர் கண்டு பிடித்துள்ளார்.

அந்த விதத்தில் துரந்தர் நிறைவை (perfection) எட்ட முயலும் ஒரு படம்.  எளிதில் குறை காண முடியாத படம்.  உணவின் சுவை,  குடும்ப விழாக்கள் போன்ற ஒரு சில துறைகளைத் தவிர, நிறைவை பெரும்பாலும் மறந்து விட்ட ஒரு சமூகத்தில் வெகுஜனங்களுக்கான ஒரு படம் நிறக்க தயாரிக்கப்பட்டது நம்பிக்கை தருகிறது.

No comments:

துரந்தர் - நிறைவை நோக்கி...

விமலாதித்த மாமல்லன் 'எழுத்துக்கலை' என்ற புத்தகத்தில், கதை சொல்பவர்களின் அசிரத்தையை சுட்டிக்காட்ட எஸ்ராவின் ஒரு கதையை உதாரணமாகக் காட்...