உஸா
"காலித் முதல் மரத்தை வெட்டினான். பின் நபி அவர்களிடம் சென்று தன் செயலை விவரித்தான். ‘ஏதேனும் வித்தியாசமாக நிகழ்ந்ததா?’ என்று அவர் கேட்டார். அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றான் காலித். இரண்டாவது மரத்தை வெட்டியபோது அப்படியே நிகழ்ந்தது. மூன்றாவது மரத்தை வெட்டியபோது தலைவிரி கோலத்தில் அல்-உஸா தோன்றி காலிதை அழிக்க ஆணையிட்டாள். உடனே காலித் அவளை இரு கூறாக வெட்டினான். அவள் சாம்பல் குவியலாக வீழ்ந்தாள். பின் காலித் சுலாமியைக் கொன்றுவிட்டு, கடைசி மரத்தையும் வெட்டினான். திரும்பி வந்து நபி அவர்களிடம் நடந்ததைக் கூறிய போது, “அந்தப் பெண் அல்-உஸா. அவளை ஒரு போதும் வணங்கக் கூடாது” என்றார் நபி. ------------------- “அப்பா! என் வீடு...” என்றுதான் அவள் புலம்பியது போலத் தெரிந்தது. மொழி எது என்று புரியவில்லை. தமிழாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவள் சொன்னது அது தான் என்று தோன்றியது. சுவற்றோரம் சாய்ந்தபடி, கையில் பெரிய வாளுடன் காலை நீட்டி அமர்ந்திருந்தாள். கழுத்தில் செவ்வரளியோ செம்பருத்தியிலோ மாலை போன்று இருந்தது. அல்லது ரத்தமா? அவள் ...