Saturday, August 10, 2024

தேங்கிவிட்ட தமிழ் - உவமைகளும் நகரவாசிகளும்

Anti-fragile  எனும் ஆயிரங்காலத்துப் பயிர்

தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சிரமங்களையும் சிக்கலான சிந்தனைகளை எப்படி தமிழில் விளக்குவது என்ற ஆலோசனைகளிலும் சிந்தனைகளிலும் நேரம் சென்றது.  நண்பருக்கு என்னுடைய பழைய கட்டுரைகளில் ஒன்றை அனுப்பத் தேடியபோது நான் நாஸிம் நிக்கலஸ் தாலேபின் Anti-fragile என்பதை விளக்க முயன்ற கட்டுரை கண்ணில் பட்டது.  குழந்தைத்தனமாக சுற்றி சுற்றி  விளக்கியிருந்தேன்.  எழுதிய எனக்கே அது புரியவில்லை.

ஆங்கிலத்திலேயே Anti-fragile என்பதை விளக்க ஒரு புத்தகமே தேவைப்பட்டிருக்கிறது.  ஆனால், சிக்கலான இந்திய சமூகங்களே Anti-fragile.  ஆனால் அவை அதை எப்படிப் புரிந்து கொண்டுள்ளன? நாம் உவமைகளைக் கொண்டு சிக்கலானவற்றைப் புரிந்து கொள்கிறோம்.  அந்த உவமைகளும் பெருமளவு இயற்கையுடன் ஒன்றியவை.  தாவரங்கள், விலங்குகள், இயற்கை அமைப்புகள் கொடுத்த உவமைகளைக் கொண்டு சமூக பொருளாதார கருத்தியல்களைப் புரிந்து கொள்வது நமக்கு எளிது; அதுவே வழக்கம் கூட.  வரம்பின்றி வரிகளின் மூலம் மக்களை வதைக்கும் அரசுக்கு  'யானை புக்க புலத்தை' உவமையாகக் கூறினர். அப்படி இருக்கும்போது Anti-fragile என்பதை விளக்க இயற்கை ஒரு உவமையையாவது கொடுத்திருக்க வேண்டும்.

Antifragility is a property of systems in which they increase in capability to thrive as a result of stressors, shocks, volatility, noise, mistakes, faults, attacks, or failures.

ஒரு பொருள் வலுவானது (robustness) என்றால், அதன் திண்மைக்கு உவமையாக 'தூணை'க் குறிப்பிடுகிறோம்.  வலுவானது, வளைந்து கொடுக்காது; ஆனால் அதீத தாக்குதலுக்கு உள்ளாகும்போது உடைந்து போகக் கூடும்.

ஒரு பொருள் வளைந்து கொடுத்து அழியாமல் எழுந்து நிற்கும் (resilient) என்றால், அதற்கு உவமையாக 'நாணலை'க் கூறுவோம்.  ஆற்றின் வெள்ளத்தில் கரையில் உள்ள மரங்கள் அடித்துச் செல்லப்பட்டாலும், ஆற்றில் உள்ள நாணல் வளைந்து கொடுத்துத் தப்பிக்கிறது.

ஒரு பொருள் பல்வேறு இன்னல்களைக் கடந்து அதன் மூலம் மேலும் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு உதாரணம் - ஆயிரங்காலத்துப் பயிர்.  அது வறட்சி, வெள்ளம், நோய்கள், பூச்சிகள் என்று பல சோதனைகளை சந்தித்து ஒவ்வொன்றிற்கும் ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டே வந்துள்ளது.  புதிய சோதனைகள் வந்தாலும், அதைக் கற்று, கடந்து அடுத்த தலைமுறையில் அதை எதிர்கொள்ளும் திறனை பயிர் பெற்று விடுகிறது.  இதுவே Anti-fragile.

ஓரளவுக்கு இயற்கையுடன் தொடர்பு இருந்து, கொஞ்சம் கற்பனையும் இருந்தால், ஆயிரங்காலத்து பயிர் என்பதன் பொருள் தரும் பார்வை விரிவானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும்.  இவை இரண்டுக்கும் உள்ள தட்டுப்பாடுதான் தமிழனின் நிலைமை.

இயற்கையிலிருந்து விலகிப் போகும் போது, இந்த உவமைகள் எடுபடுவதில்லை. அது இப்போதைய தமிழின், தமிழனின் பிரச்சினை.  பெரும்பாலான வாசகர்கள் நகரங்களில் இருப்பதால், இயற்கையை உவமையாகக் கூறுவது அவர்களிடம் தேவையான தாக்கத்தை உருவாக்குவதில்லை.  நகர வாழ்க்கையிலும், நிறுவனச் சூழல்களிலும், அன்னியமாக இருந்தாலும் ஏற்கனவே அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில உவமைகள் நேரடியாகக் கிடைத்துவிடுவதால், புதிய உவமைகளை தமிழில் உருவாக்கிக் கொள்ளும் திறமையும் அவனிடம் இல்லை.  

இதுவே தமிழின் சோகம்.  



Saturday, August 03, 2024

தேங்கிவிட்ட தமிழ் - Idiom

மொழிபெயர்க்கும் போது, நவீன உலகத்தின் பல கூறுகளுக்கு தமிழில் சரியான சொற்களோ, உவமைகள் அல்லது மொழிமரபுகளோ (Idiom) உருவாகவில்லை.  இந்தக் குறை பிற இந்திய மொழிகளிலும் இருக்கலாம்.  

கடந்த சில நூற்றாண்டுகளாக உலகெங்கும் சமூகங்களில் எழுந்த முக்கிய மாற்றம் - நிறுவனங்கள்.  வணிக நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்கள் என்று உருவானவை, ஆங்கிலத்தில் பல புதிய மொழிமரபை உருவாக்கியுள்ளன.  சில எடுத்துக்காட்டுகள் - hierarchy, top-down approach, grassroot.  இவற்றைத் மொழிபெயர்க்கும் போது, எளிய சிறு சொற்கள் இல்லாததால், ஆங்கிலத்தில் இவை தரும் பொருளின் தாக்கம் தமிழில் இருப்பதில்லை.

உதாரணத்திற்கு - Grassroot.  சமஸ்கிருத மூலத்திலிருந்து வங்காளத்தில் திருணாமூல் என்ற எளிய மொழிபெயர்ப்பு ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருளைத் தந்துவிடுகிறது.   தமிழில் இதற்கு இணையான 'அடிமட்ட' என்ற சொல்லில் அந்த வீச்சு இல்லை. 'திரணம்' என்ற சமஸ்கிருத மூலச் சொல்லை எங்கே கேட்டிருக்கிறோம்?  பாரதியின் புதிய ருஷ்யாவில்.

மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள் 

...

இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி

சரண் இன்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னைத்

திரணம் எனக் கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம்

அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில்

ஒரு வேளை பாரதி நூறாண்டுகள் வாழ்ந்திருந்திருந்தால், தமிழில் புதிய சொற்கள் பல வந்திருக்கலாம். அதை விட, திராவிடக் கட்சிகள் மட்டும் தமிழைக் கூறு போடாதிருந்தால், சமஸ்கிருதத்திலிருந்து பல எளிய சொற்களை இறக்குமதி செய்திருக்கலாம்.

Friday, August 02, 2024

மொழிபெயர்ப்புகளின் மொழி

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

  தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

  சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

  அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.


பாரதி சொன்னாரென்று தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி மூன்று வருட அனுபவம் பெற்றேன்.  என்னைப் போல பலரும் மொழிபெயர்ப்பதை பாரதி கண்டால் சந்தோஷப்பட்டிருப்பானா என்பதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது.  இந்தக் கட்டுரையில் சுட்டியுள்ள குறைகள் என் எழுத்துக்களிலும் இருக்கின்றன.  மேம்படுத்த முயல்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.  இந்தக் கட்டுரையில் உள்ள சில உதாரணங்கள் வேறொரு மொழிபெயர்ப்பு ஆசிரியரின் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை.  இதே குறைகள் நான் எழுதியவற்றிலும் இருக்கலாம்.  முதல் வருட அனுபவத்திலிருந்து அத்தகைய குறைகள் குறைந்து வந்திருக்கும் என்பது என் நம்பிக்கை.

தமிழனின் அன்றாட வாழ்வைத் தாண்டி உள்ள சிக்கலான விஷயங்களைத் தமிழில் எழுதுவது எளிதல்ல.  கடந்த நூறு ஆண்டுகளாகத் தமிழ் தேங்கியுள்ளது.  புதிய கலைச்சொற்கள் தேவையான அளவு புழக்கத்தில் இல்லாததால், மொழிபெயர்ப்பாளரின் பணி மேலும் கடினமாகிறது.

ஒரு புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டதா என்பது அதன் நடையில் தெரியக் கூடாது.  இயல்பாக அந்த மொழியிலேயே எழுதப்பட்டவற்றை படிப்பது எளிது.  பிற மொழிகளிலிருந்து, முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றும்போது, கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.

முதலில் என் கண்ணை உறுத்துவது 'மற்றும்' என்ற சொல்.  ஆங்கிலத்தில் 'and' எங்கு வேண்டுமானாலும் வசதிப்படி பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.  அதை அப்படியே 'மற்றும்' என்று மொழிபெயர்க்கிறார்கள்.  பல விஷயங்களைப் பட்டியலிடும் போது 'உம்' என்ற இடைச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.  பல இடங்களில் அது தொக்கி நின்றாலும் பொருள் தரும்.  அதனால் 'மற்றும்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தேவையற்றது.  

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தின் முதல் பகுதியில் அழுத்தம் இருக்கும்.  அதை அப்படியே மொழி பெயர்க்கும் போது செயற்கையாகத் தோன்றும்.  தமிழுக்கு ஏற்றபடி மொழி வாக்கிய அமைப்பை மாற்றும் போது, பொருளில் அழுத்தமின்றி சாதாரணமாக இருக்கும்.  "But your perceptions will be wholly different if you were more patient with him and read him with an open mind." என்பதை 'பொறுமையாக திறந்த மனத்துடன் அவரைப் படித்தால், உங்கள் கண்ணோட்டம் மாறும்' என்று மொழிபெயர்க்கும் போது அழுத்தம் குறைவதை கவனிக்கலாம்.  பேசும் முறையில்  நாம் ஏற்ற இறக்கத்துடன் (intonation),  பேச்சின் இறுதியில் தான் முக்கியமானவற்றைக் கூறுகிறோம். 

ஒரு சொல்லை அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றுவதால் அது அன்னியமாகத் தோன்றும். உதாரணத்திற்கு, "The court accepted the submissions of the petitioner." என்பதை "மனுதாரர்களின் சமர்பிப்புகளை நீதிமன்றம் ஏற்றது" என்பதில் 'சமர்ப்பிப்புகள்' என்ற சொல்லை விட, நடைமுறையில் பயன்படுத்தப்படும் 'கோரிக்கைகள்', 'ஆவணங்கள்' இயல்பாகத் தோன்றும்.  இதே சூழலில், 'representation' என்ற சொல்லுக்கு 'பிரதிநிதித்துவம்' என்ற சொல் பொருத்தமானதல்ல - அதற்கு, 'மனு' அல்லது 'கோரிக்கை' அல்லது 'தரப்பு வாதம்' போன்றவை பொருத்தமாக இருக்கும்.

தவிர்க்க வேண்டிய செயல்பாட்டு வினை.  "violence got triggered" என்பதை மொழிபெயர்க்கும் போது, 'வன்முறை தூண்டப்பட்டது' என்பது ஆல் இண்டியா ரேடியோ செய்திகள் போல இருக்கும்; 'சமூகவிரோதிகள் வன்முறையைத் தூண்டினர்' என்பது படிக்க இயல்பாக இருக்கும்.

தமிழில், அழுத்தம் கொடுக்க இரட்டை எதிர்மறையைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது.  'உங்களுக்குத் தெரியாததல்ல' என்ற பிரயோகத்தைத் தாண்டி என்னால் அது போன்ற சொல்லமைப்புகளை நினைவு படுத்த முடியவில்லை.  "not an unknown phenomenon" என்பதற்கு 'அறிமுகமுல்லாத நிகழ்வு அல்ல' என்பதை விட 'சகஜம் தான்' சுருக்கமாக உள்ளது.   

ரா கி ரங்கராஜனின் மொழிபெயர்ப்புகளில், கதை நிகழ்விடம், கதை மாந்தர்கள் மட்டுமே அன்னியமாக இருக்கும்.  அப்படி எழுத முடிவது எப்போதோ!

தெரியாது என்று தெரியாது

கடந்த சில நாட்களாக சுற்றங்களுடனும் நண்பர்களுடன் நடந்த உரையாடல்களில் நம்முடைய வட்டம் எவ்வளவு சிறியது என்று உணர முடிந்தது.  ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அங்கு வந்திருந்த பெரும்பான்மையான கட்சிக்காரர்களுடன் எங்களால் பத்து நிமிடங்கள் கூட உரையாட முடியாது.  நம் உலகம் வேறு; அவர்கள் உலகம் வேறு என்பதை அதுவரை மேலோட்டமாக அறிந்திருந்தாலும் அன்று அந்த உண்மை உரைத்தது.

ஓரளவுக்கு அந்த கட்சிக்காரர்கள் வாக்களிக்கும் மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். பிற கட்சிக்காரர்களுக்கு சற்றே அதிக தொடர்பு இருக்கலாம்.   ஆனால் சமூக வலைத்தளங்களிலும் வழக்கமான ஊடங்களிலும் அரசியல் பேசுபவர்களை விட கட்சிக்காரர்களுக்கு மக்களைப் பற்றிய அதிக பரிச்சயம் இருக்கும்.  

நாம் எந்த அளவுக்கு வாக்களிக்கும் மக்களை அறிந்திருக்கிறோம் என்பதை பின் வரும் ட்வீட் விளக்குகிறது. 

இதன் பொருள்: 
நீங்கள் வாட்ஸப், டிவிட்டர், ஃபேஸ்புக்கில் அரசியல் விவகாரங்களில் நேரத்தைக் கழிப்பவர்களா? நீங்கள் எவ்வளவு வித்தியாசமானவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
நீங்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவராக இருந்தால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை. 

சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுபவராக இருந்தால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை. 

நீங்கள் வேலை பாரக்கும் இடத்தில் 100 பேருக்கு மேல் வேலையில் இருந்தால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை. 

உங்களுடைய எம்.எல்.ஏ, எம்.பி யார் என்று உங்களுக்குத் தெரியுமென்றால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை. 

அரசியல் 
செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர் என்றால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை.

இவை எல்லாம் பொருந்தும் என்றால், நீங்கள் நிச்சயமாக வாக்களிக்கும் பெரும்பான்மையினரைப் போல இல்லை.  

'கொலை  தீயச்செயல்' என்பது போன்ற அடிப்படை விஷயங்களைத் தவிர பிற அரசியல் விஷயங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்களே சொந்த சிந்தனையைக் கொண்டு மதிப்பிடவே கூடாது. 

ஆனால் நம்மில் பலரும் தனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பிறரது கருத்தைப் புரிந்து கொள்ள முயல்கின்றோம்.  தனக்கு இது தெரியாது என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருப்பது அறியாமையின் தீவிர வடிவம்.  

இந்த அறியாமை தான் நமது அரசியல் விவாதங்களிலும், சில சமயம் அரசியல் நிர்வாக முடிவுகளையும் ஆட்டிப்படைக்கிறது.

Is our pursuit of knowledge Dharmic?

 A few days ago, I began watching a Tamil movie - கெணத்தை காணோம் -  'The Well is missing' - The title is based on a popular comedy s...